தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2020, 12:12 PM IST

ETV Bharat / state

பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக இரண்டாயிரம் ரூபாயும், வழக்கமாக வழங்கப்படும் உணவு தானியங்களும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை சிவப்பு மண்டலமாக 11 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதற்கான நடவடிக்கைகளாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த 40 நாள்களாக இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை கொண்டாடுவதற்கான வாய்ப்பாக பார்க்கக்கூடாது. சென்னையில் உள்ளவர்களாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் வாழ்பவர்களாக இருந்தாலும் கட்டுப்பாடுகளை மறந்துக்கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றால், நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை மாநில அரசுகள் எந்த விதத்திலும் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்று தான் மத்திய அரசு கூறியிருக்கிறதே தவிர கரோனா வைரஸ் பரவல் வேகத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை கடுமையாக்கிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. எனவே, சென்னையை போன்ற பகுதிகளில் கரோனா பரவலைத் தடுப்பதற்குத் தேவையான கட்டுப்பாடுகளை நீடிக்கச் செய்வது குறித்து அரசு ஆராய வேண்டும். அவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளை சில விதிகளுக்குட்பட்டு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தேவையற்றதாகும். கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப் பட்டதன் பயனாக மது இல்லாத தமிழகத்திற்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. அதை மதித்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். மாறாக, பசுமை மண்டல மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது அங்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்துவிடும். இதையும், மக்கள் நலனையும் கருத்தில்கொண்டு மதுக்கடைகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஊரடங்கு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும், அது தமிழ்நாட்டிலுள்ள 90 சதவிதம் மக்கள் வருவாய் ஈட்ட எந்த வகையிலும் பயனளிக்காது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் கூட மக்களின் அச்சம் காரணமாக பல பகுதிகளில் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை வழங்காவிட்டால் அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக 2 ஆயிரம் ரூபாயும், வழக்கமாக வழங்கப்படும் உணவு தானியங்களும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details