தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2021, 12:44 PM IST

ETV Bharat / state

ரமலான் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: ரமலான் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Ramadan greetings
ரமலான் பண்டிகை

தமிழ்நாட்டில நாளை (மே.14) ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பா.ம.க. இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் தான் இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு. இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சி தான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள்.

மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

வைகோ வாழ்த்து

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில், "உலகியல், சமயம் என இரண்டு நிலைகளிலும், மகத்தான வெற்றியை ஒருசேரப் பெற்றவர் அண்ணலார் முகமது நபி (ஸல்).

ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என அறிவித்து, இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்தினார். அவரது அரிய உழைப்பினால், அவரது பொன்மொழிகளால், உலக மக்கள் தொகையில், கிறித்துவத்திற்கு அடுத்த நிலையில் இன்று இஸ்லாம் இருக்கின்றது.

கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (கொடை), ஹஜ் புனிதப் பயணம் என்ற இந்த ஐம்பெருங் கடமைகளுள் ஒன்றான நோன்பினை, இஸ்லாமியக் கணக்கின் ஒன்பதாவது மாதமான ரமலானில் தோன்றும் பிறையைப் பார்த்துத் தொடங்கி, பத்தாவது மாதமான ஸவ்வால் மாதப் பிறையைப் பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றார்கள்.

ரமலானின் ஒவ்வொரு நாளிலும் மகத்தான யுத்தங்கள், மாபெரும் வெற்றி நிறைந்த சரித்திரங்கள், பெருமை மிக்க வேதங்கள் பல இறங்கியதும், பெருமானார் (ஸல்) பங்கேற்ற பத்ருப் போர் வரை, ஏராளமான படிப்பினைகளும் உண்டு.

புனித மாதம் விடைபெற்றுச் செல்லும் வேளையில், கரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திடவும் இதயமாற வேண்டி, இனிய ஈத் பெருமான் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details