தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைது முதல் விடுதலை.... முழு விவரங்களை தாக்கல் செய்ய நளினிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது தொடங்கி விடுவிக்க தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களையும் ஏப்ரல் 7ஆம் தேதி தாக்கல் செய்ய நளினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Mar 19, 2020, 4:19 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்," மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க, தமிழ்நாடு அமைச்சரவை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

மனுவில் மேலும் மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுனர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தன்னை விடுவிக்கக் கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினி எனவும் குறிப்பிட்டார்.

ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளில் கடமை தவறும்போது நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தலாம் எனவும் குறிப்பிட்டார். 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தவறிவிட்டதாக புகார் தெரிவித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் வாதிட்டார்.

10 ஆண்டுகள் 14 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரை விடுவிப்பதற்கான திட்டம், தமிழகத்தில் உள்ளது எனவும், அதன் அடிப்படையில் 2002ஆம் ஆண்டே விடுதலைக்கு நளினி தகுதி பெற்றிருந்தார் எனவும் வாதிட்டார்.

ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரிய இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:துப்புரவுப் பணியாளர்கள் இனி ’தூய்மைப்பணியாளர்கள்’ - பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details