தமிழ்நாடு

tamil nadu

வா தலைவா! வா - ரஜினி ரசிகர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 10, 2021, 2:03 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

rajini fans
ரஜினி ரசிகர்கள்

'வா தலைவா வா' என்ற முழக்கத்துடனும் ரஜினிகாந்த் அரசியல் வசனங்கள் தொகுப்புடனும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்!

'இப்போது இல்லைனா எப்போதும் இல்லை', 'நல்லாட்சி கொடுக்க வா' என ரஜினி ரசிகர்கள் தங்களது விருப்பங்களை போராட்ட மேடையில் குறிப்பிட்டு பேசினர். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை டிசம்பர் 29ஆம் தேதி அறிவித்திருந்தார்.

தலைவனுக்காக தவமிருக்கும் ரசிகர்கள்

இதைத் தாங்கிக் கொள்ள இயலாத அவரது ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லம் முன்பும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தி ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம் ரஜினி ரசிகர்களால் திட்டமிடப்பட்டது.

அறவழி போராட்டம்

இந்த முடிவை ஆட்சேபித்த ரஜினி ரசிகர் மன்றம், ’இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டாம். இது நேரடியாக ரஜினிகாந்த் மனதை நோகடிக்கும் செயல்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று (ஜன.10) வள்ளுவர் கோட்டத்தில் 1000-க்கும் அதிகமான ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வா தலைவா! வா..

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் நம்மிடம் பேசிய போது, ’அதிமுக, திமுக கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டிகள் அமைத்துள்ளோம். இந்த அளவு பணிகளை மேற்கொண்டுள்ளோம். எங்களின் உழைப்பு வீணாக கூடாது. தலைவர் உடல் நலம் நிச்சியமாக முக்கியம் தான் அதே சமயம் அவர் அரசியலில் மாற்றம் நிகழ்த்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

ரஜினி ரசிகர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்

அரசியலுக்கு வருவதாகத் தொடர்ந்து கூறிய தலைவர் ரஜினி, திடீரென வரவில்லை என்றால் ரசிகர்களாகிய எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது என உடைந்த குரலில் பேசுகிறார் மற்றொரு ரசிகர். உடல் நலத்துடன் தலைவர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் ஏக்கமாகத் தெரிவிக்கிறார்.

கொடி பறக்குதா?

ரஜினி மக்கள் மன்ற கொடியை வடிவமைத்தாகக் கூறும் அக்பர் பாஷா,”நான் 13 வயது முதல் ரஜினிகாந்த் ரசிகர். அப்போது பீடா கடை வைத்து நடத்தினேன். தற்போதைய ரஜினி மக்கள் மன்ற கொடியை நான்தான் 1992இல் வடிவமைத்தேன். அதை ரஜினிகாந்திடம் காட்டிய போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

ரஜினி ரசிகர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்

அப்போது இது ரசிகர் மன்றத்திற்கான கொடி என்று விளக்கம் அளித்தேன். அப்போதுதான் ரஜினிகாந்த் மகிழ்ச்சி அடைந்தார். கொடியின் நீல வண்ணம் வானத்தை குறிக்கின்றது, சிவப்பு ரத்தம் அனைவருக்குமானது என்பதை குறிக்கின்றது. இந்த ஆண்டு தலைவர் அறிவிக்கும் அரசியல் கொடி நிச்சயம் பறக்கும்’ என்கிறார் எதிர்ப்பார்ப்புடன்.

இதையும் படிங்க:ரஜினி உடல் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details