நிதி மோசடி வழக்கு; சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட்! - காசோலை
![நிதி மோசடி வழக்கு; சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3716108-thumbnail-3x2-sarath.jpg)
2019-07-01 18:21:13
சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ராதிகா, சரத்குமார் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 7 காசோலைகளை இருவரும் வழங்கியுள்ளனர். ஆனால், பணம் இல்லாமல் திரும்ப வந்ததால், சரத்குமார், ராதிகா ஆகியோர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரபட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், சைதாப்பேட்டை மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை இன்னும் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு சைதாப்பேட்டை மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார், ராதிகா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விசாரணைக்கு பின்னர் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.