கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 1,92,021 ஆகிய சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ராதாபுரம் தொகுதியில் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு எம்எல்ஏ இன்பதுரை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.