தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2021, 8:00 PM IST

ETV Bharat / state

குயின் வெப் தொடர்: ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் - தீபா குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் குயின் வெப் தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையாக வைத்து, தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் என்ற இணையதள தொடர் வெளியானது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வெளியான குயின் இணையதள தொடர் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியுள்ளது.

அதில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவின் தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது போல குயின் தொடரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது" என்று எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details