தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2020, 6:26 PM IST

ETV Bharat / state

அண்ணா பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் ஒப்பந்த அடிப்படையிலான உதவிப் பேராசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைகழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான பல்கலைகழகங்கள் 2008-2009ஆம் ஆண்டில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

இந்த பல்கலைக்கழகங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2011ஆம் ஆண்டு அவற்றை ஒன்றாக இணைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், சிலர் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், 2019ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஒப்பந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிக்க தடைக் கோரியும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும் உதவி பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ஒப்பந்த அடிப்படையில் 310 பேரும், நிரந்தர அடிப்படையில் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 556 பேரும் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில், 25 ஆயிரத்து 680 இளங்கலை மாணவர்களுக்கு ஆயிரத்து 284 பேராசிரியர்களும், ஆயிரத்து 806 முதுகலை மாணவர்களுக்கு 120 பேராசிரியர்களும் என, மொத்தம் ஆயிரத்து 404 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.


இதனால் தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும்,மனுதாரர்கள் உள்ளிட்ட 310க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் உள்ளதால், பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், போதிய தகுதியும் அனுபவமும் உள்ள மனுதாரர்களை, நிரந்தரப் பணியில் காலியிடம் ஏற்படும்போது நியமிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல மனுதாரர் உள்ளிட்டோரை டிசம்பர் 1ஆம் தேதி முதல் தற்காலிக பணியாளர்களாக பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details