சென்னை:திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு பார்வை முற்றிலுமாக பறி போனதால், மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாகக் கூறி, இழப்பீடு வழங்கக்கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு ரூ. 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக மூன்று மாதங்களில் வழங்க கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், இழப்பீடு வழங்காததால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.