தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 14, 2020, 3:58 AM IST

Updated : Sep 15, 2020, 8:36 AM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பு, தூக்கமின்மை- எச்சரிக்கை விடுக்கும் மனநல மருத்துவர்

எழும்பூர் குழந்தைகள் மன நல பிரிவின் பேராசிரியர் டாக்டர் சாந்தி நமது ஈ டிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

உளவியல் பேராசிரியர் டாக்டர் சாந்தி
உளவியல் பேராசிரியர் டாக்டர் சாந்தி

கரோனா வைரஸ் குறித்து தற்போது அனைவருக்கும் ஓரளவு புரிதல் ஏற்பட்டுள்ளது. சில நோய்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிகளவில் இருந்துள்ளன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய நிலை தொடர்ந்து இருந்தது.

கரோனா வைரஸ் ஒரு பெரும் தொற்றாக 120 ஆண்டுகள் கழித்து வந்துள்ளது. வேகமாக ஓடிக் கொண்டிருந்த அன்றாட வாழ்க்கையில் திடீரென நோய் தொற்றினால் அனைத்தும் நிலை குலைந்து நின்றது. இதனால் அனைவருக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய், காசநோய் போன்றவை வந்தபோது நாம் அச்சம் அடைந்தோம். இதற்குரிய சிகிச்சைகளில் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் புதிதாக வந்த கரோனா தொற்றின் தாக்கம் குறித்து மருத்துவ துறையில் இதுவரை தெளிவான முடிவு கிடையாது. ஆனால் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

ஆரம்ப காலத்தில் கரோனா வைரஸ் குறித்த செய்திகள் மட்டுமே பெரிய அளவில் இருந்தன. இதனால் மக்கள் மனதில் தொடர்ந்து அச்சம் நிலவி வந்தது.

பொது மக்களுக்கு நோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆரம்பத்தில் தங்களுக்கு இந்த நோய் வந்துவிடும் எனவும், வந்த பின்னர் தங்களை அழைத்துச் சென்று தனியாக வைத்து அடைத்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. நோய் தொற்று ஏற்பட்டவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தும்போதும் அவருக்கு அச்சம் அதிகரிக்கலாம்.

பேராசிரியர் டாக்டர் சாந்தி

மருத்துவமனையில் ஏற்படும் சூழ்நிலைகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். மருத்துவத்துறையில் இருந்து விவரம் தெரிந்தவர்களுக்கு இந்த நோயின் பதட்டம் மேலும் அதிகமாகவே இருக்கும். இந்த நோய் அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்லும் என்பது தெரிந்ததால் அவர்களுக்கு பதட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

அதேபோல் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னால் வேறு யாருக்காவது வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் பயத்திலும் இருக்கின்றனர். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் பணி முடித்து வீட்டிற்குச் செல்லும்போது தன்னால் யாருக்கும் தொற்று வரக்கூடாது என்ற குற்ற உணர்ச்சியில் அவர்களுக்கும் பயமும் அச்சமும் அதிகரிக்கிறது.

அதேபோல் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்தவர்களை வீட்டிற்குள் சேர்ப்பதற்கும் சில குடும்பத்தினர் அச்சம் அடைகின்றனர். இதனால் வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கபடுகின்றனர்.

நமது சமூகத்தில் ஒருவர் இறந்தால் அவரின் இறப்பையும் திருவிழாபோல் கூடி உரிய மரியாதைகள் செய்து அனுப்பி வைப்போம். கரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறப்பவர்களால் தங்களுக்கு தொற்று வரும் என்ற அச்சத்தில், அவர் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவிவிடும் என்ற பயத்தில் நமது கலாச்சாரப்படி ஒன்றாகக்கூடி அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி அனுப்ப முடிவதில்லை. இறந்தவர்களை அரசே அடக்கம் செய்துவிடுகிறது.

கரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களை பார்க்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியால் கூட தூக்கமின்மை வரலாம். கரோனா வைரஸ் தங்களுக்கு வந்துவிடுமா என ஆரம்பத்தில் இருந்து இறந்துவிடுவோமோ என்ற கடைசி நிலை வரை தொடர்ந்து பதட்டம், பயம், அச்சம் ஆகிய மூன்றும் மனிதர்களை தாக்குகிறது. இதனால் அவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

மனநலம் பாதித்தவர்களுக்கு புரிதலுடன் பயம் அச்சம் போன்றவை இருக்கும். ஆனால் மனநலம் பாதித்தவர்களுக்கு இந்நோய் குறித்த எந்தவித புரிதலும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் போக்குவரத்து முடக்கத்தால் அவர்களை அழைத்து வருவதற்கு முடியவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து சிலருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கு வருவதற்கு தயங்குகின்றனர். இதனால் ஏற்கனவே சிகிச்சை பெற்று மனநலம் குணமடைந்த சிலருக்கு மீண்டும் மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நோயில்லாமல் சமூகப் பிரச்னை பல உள்ளன. 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் எப்பொழுதும் வீட்டில்தான் இருக்க வேண்டும். இணை நோய்கள் எனக் கூறக்கூடிய சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் போன்ற இனிய நோய்கள் இருப்பவர்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அன்றாடம் வழக்கமாக நடைபயிற்சி செல்வது வயதான முதியவர்களுடன் தனது மனதில் உள்ளவற்றை எடுத்துக்கூறுவது போன்றவற்றை செய்து வந்தனர். ஆனால் தற்பொழுது அது போன்ற நடைமுறைகள் செய்ய முடியாததால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நோய் தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரால் வாழ்க்கையை ஓரளவு நடத்திச் செல்ல முடிந்தது. ஆனால் தினக்கூலிகளாக இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமாகவே இருந்துள்ளது. அவர்கள் வாழ்க்கையை நடத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. இது உலக அளவில் சவாலாகவே உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் நாம் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம். மக்களுக்கு முக்கியமாக வேலையும் பொருளாதாரமும் அவசியமாக தேவைப்படுகிறது.

வைரஸ் தொற்று தங்களுக்கு ஏற்படும் என்ற பயத்தாலும், அடுத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், நோய் வந்தவர்களுக்கு ஏற்படும் உடல்வலி, நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனது எதிரிக்கும் இந்த நோய் வரக்கூடாது என நினைக்கும் வகையிலான பாதிப்பு, அதனைத் தொடர்ந்து வேறு நோய் பாதிப்பு வருமா என்ற அச்சம், குடும்பத்தின் மீதான அக்கறை போன்றவை காரணமாக தூக்கமின்மை ஏற்படுகிறது.

கரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். தூக்கமின்மை என்பது ஒரு வியாதி ஆகும். உடலின் இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்தி மனிதர்களை நோயிலிருந்து காப்பாற்றி அறுவை சிகிச்சை செய்கிறோம்.

தூக்கமின்மை ஏற்படுபவர்களுக்கு பகலில் நீங்கள் தூங்க கூடாது, குறிப்பிட்ட நேரத்தினை தூங்குவதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள், அந்த அறையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள், காபி டீ போன்றவற்றை மாலை 4 மணிக்கு மேல் குடிப்பதை குறைத்து விடலாம்.

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலினை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய உடற் பயிற்சிகளை மாலை ஆறு மணிக்கு மேல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

தூங்குவதற்கு முன்னர் சுடு தண்ணீரில் குளிக்கலாம். வீடுகளில் பயன்படுத்தும் வாழைப் பழத்தை உண்பது, சூடான பால் அருந்துதல், இதமான இசையை கேட்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இசையை கேட்பது என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். தூங்கும்போது அறையை இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக டிவி செல்போன் போன்றவற்றை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு தூக்கமின்மை என்பது ஒரு பெரிய பிரச்னைதான்.

இதுபோன்று தூக்கமின்மையால் பாதித்தவர்களுக்கு கொஞ்ச நாட்கள் தூக்கம் வருவதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுபோன்ற மாத்திரைகளுக்கு பழக்கமானவர்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கிறது என்பதால் தொடர்ந்து எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். அவ்வாறு எடுக்காமல் மனநல மருத்துவர்களை கலந்து ஆலோசித்து குறைத்துக் கொள்ளலாம்.

இதுபோன்று நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அந்த விழிப்புணர்வு கடை நிலையில் இருப்பவர்களிடமும் சென்று சேர வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் கரோனா போய்விட்டது என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார பாதிப்பினால் அரசு பொது முடக்கத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களது தனிமனித பொறுப்பை உணர்ந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். நாம் இயல்பான வாழ்க்கைக்கு மாறிவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்.

முகக்கவசத்தையும் ஒழுங்காக முறைப்படி அணிய வேண்டும். தேவையான சிகிச்சைகளும் சிறப்பாக அரசு மற்றும் தனியார் துறையில் அளிக்கப்பட்டுவருகிறது. தூக்கமின்மை போன்ற மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கும் மனநல மரு்ததுவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதையும் படிங்க... ”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா

Last Updated : Sep 15, 2020, 8:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details