கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜசிம்ம நாயுடு. இவர் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்ததாகக் கூறி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜசிம்ம நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளர் ஞான செல்வம் உமாராணியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, தன் மீது பொய் வழக்கு போட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், தன்னுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த விஷ்ணு பிரியா என்பவரும் உமாராணி, பெண் ஆய்வாளர் ஞான செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தனது பணத்தை அபகரிக்க முயற்சிப்பதாக ராஜசிம்ம நாயுடு குற்றஞ்சாட்டினார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலமாக தனக்கு பழக்கமானதாகவும், திருமணமானதை மறைத்து தன்னோடு இணைந்து வாழ முயற்சித்ததாகவும் தெரிவித்தார். பெண் ஆய்வாளர் ஞான செல்வம் உடன் சேர்ந்து 2 பெண்கள் தன்னிடம் 28 லட்சம் ரூபாய் வசூல் செய்ததை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.