சென்னை: எம்.கே.பி நகரில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையதாக அபினேஷ்(24) என்பவரை நேற்று முன்தினம் சென்னை எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபினேஷை எம்.கே.பி நகர் காவல் நிலைய காவலர்களான முனிராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுபடி அன்றிரவு 12மணிக்கு நீதிமன்ற காவலில் அடைக்க புழல் சிறைக்கு அழைத்து வந்து உள்ளனர்.
அப்போது சிறை வாயிலில் புழல் சிறை வார்டனான அருண் ராஜ் மற்றும் காவலர் காமராசு ஆகியோர் கைதி அபினேஷை முழுவதுமாக சோதனை செய்த போது, அவரது பேண்ட்டில் மறைத்து வைத்திருந்த 2 கிராம் அபின் மற்றும் 1 கிராம் அளவிலான கஞ்சா போதை பொருட்கள் சிக்கியது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை டேபிளின் மீது வைத்துவிட்டு, கைதியான அபினேஷிடம் இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் திடீரென டேபிளின் மீது வைத்திருந்த போதை பொருட்கள் காணாமல் போனதால் சிறை வார்டன் அதிர்ச்சியடைந்து, எம்.கே.பி நகர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வார்டன் குணசேகரன் எம்.கே.பி நகர் போலீசாருக்கு ஆதரவாக பேசி சுமூகமாக முடித்து கொள்ளலாம் என சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடனடியாக இந்த தகவலை சிறை கண்காணிப்பாளரிடம் சிறை வார்டன் அருண்ராஜ் கூறி உள்ளார். பின்னர், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை சிறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை எம்.கே.பி நகர் காவலர்கள் எடுத்து மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.