தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2023, 5:38 PM IST

ETV Bharat / state

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2023-24ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணத்தை உயர்த்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு மருத்துவகல்லூரிக்கான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு
அரசு மருத்துவகல்லூரிக்கான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்யப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.

இந்தப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு ஜூலை 5ஆம் தேதி வரையில் 21 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5050 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் உள்ள 150 இடங்களும், தமிழ்நாட்டில் உள்ள 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும் உள்ளன. 2022-23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 4000 ரூபாய், சிறப்புக் கட்டணம் ரூ.950 , பல்கலைக்கழக கட்டணம் 6060 ரூபாய் உட்பட 13,610 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

2022-23ஆம் கல்வி ஆண்டில் பிடிஎஸ் படிப்பிற்கு கல்விக் கட்டணமாக 2000 ரூபாயும், சிறப்புக் கட்டணமாக 950 ரூபாயும், பல்கலைக் கழக கட்டணமாக 6060 ரூபாய் உட்பட 11,610 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. குறிப்பாக, கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரிக்கு கட்டணமாக ரூபாய் 1 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி இன்று(ஜூலை 5) வெளியிட்டுள்ள அரசாணையில், '' மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம், 2016-17ஆம் ஆண்டிற்கு பின்னர் உயர்த்தப்படாமலே நீடித்து இருந்தது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டணம் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 6000 ரூபாயும், சிறப்புக் கட்டணமாக 2000 ரூபாயும், பல்கலைக்கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட அனைத்தையும் சேர்த்து 7473 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிடிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 4000 ரூபாயும், சிறப்புக் கட்டணமாக 2000 ரூபாயும், பல்கலைக் கழக கட்டணமாக (ஜிஎஸ்டி உட்பட)7473 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்.டி, எம்.எஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணம் ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாயாக இருந்ததை உயர்த்தி, 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்புக்கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஎம்., எம்பிஎச் படிப்பிற்கு கல்விக்கட்டணத்தை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், சிறப்புக் கட்டணமாக 10 ஆயிரம் நிர்ணயம்'' செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கான கல்விக்கட்டணம் 2 மடங்கு உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்புகளில் கல்விக்கட்டணம் முறை மாற்றம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஜி-20 மாநாட்டின் முன் ஏற்பாடுகள் தொடர்பான கூட்டம்: தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details