தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2020, 9:43 PM IST

ETV Bharat / state

'பிரதமர் கிசான் திட்டம் முறைகேடு குறித்து விரிவான விசாரணை வேண்டும்' - எஸ்டிபிஐ

சென்னை: பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் கிசான் திட்டம் முறைகேடு: விரிவான விசாரணை வேண்டும்- எஸ்டிபிஐ கட்சி
பிரதமர் கிசான் திட்டம் முறைகேடு: விரிவான விசாரணை வேண்டும்- எஸ்டிபிஐ கட்சி

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத 5.5 லட்சம் பேர் முறைகேடாக சேர்த்து ரூ.120 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு வேளாண்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக 80 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்துறை செயலரின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த முறைகேட்டுக்கு பின்னால் ஆளுங்கட்சியினரின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய அரசால் மிகப்பெரும் அளவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஊழல், முறைகேடுகளுக்கு வழிவக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் கழிவறை கட்டாமலேயே முறைகேடு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காமலேயே முறைகேடு, தற்போது பிரதமர் கிசான் திட்டத்தில் போலியான விவசாயிகள் பெயரில் முறைகேடு என ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளன.

மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் திட்டம் என்பதால், திட்டத்திற்குள் வராத தவறான பயனாளர்களின் பெயர்களை போலியாக சேர்த்து சில தனியார் இ-சேவை நிறுவனங்கள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டத்திலேயே ரூ.120 கோடி வரை முறைகேடு நடந்திருந்தால், மற்ற மாவட்டங்களிலும் இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் முறைகேடுகள் வெளியாகும். ஆகவே, இந்த முறைகேடுக்கு காரணமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details