சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவில் எழுத்துப்பூர்வமாக சில விளக்கங்களை ஒன்றிய அரசு கேட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா குடும்ப நலத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அலுவலர்களின் குறிப்புகளுடன் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடந்த ஐந்தாம் தேதி தமிழக சட்டத்துறைக்கு கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவில் எழுப்பப்பட்ட ஆறு கேள்விகளுக்கும் சட்டத்துறை வல்லுனர்கள் மூலம் பதில்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாநில தேர்வு துறையில் நடத்தப்படும் தேர்வின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவதால் அதுவே தகுதியாக எடுத்துக் கொள்ளலாம். தேசிய கல்விக் கொள்கையினை இந்த மசோதா எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் நாட்டின் இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது உள்ளிட்ட பதில்களை ஒன்றிய அரசிற்கு அளிக்க உள்ளோம்.