தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடு செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. 7 மாவட்டங்களில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' அமைப்பு! - cm stalin

Pre departure orientation: வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' அமைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Pre departure orientation and training center setup in seven districts of Tamil Nadu
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' அமைக்கப்பட்டுள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:24 AM IST

சென்னை:வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழர்கள் தொன்று தொட்டு வணிகம், வியாபாரம், கல்வி போன்ற காரணங்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர். கால வளர்ச்சியில் பொருளாதார காரணங்களுக்காக தமிழர்கள், வேலை வாய்ப்பிற்காக பிற நாடுகளுக்கு அதிகளவில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டன. இவ்வாறு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் பல்வேறு சூழ்நிலையால் சில நேரங்களில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் தமிழர்கள், அங்கு அவர்களுக்கு உறுதியளித்தபடி வேலை, வேலை நேரம், ஊதியம், உணவு, உறைவிடம், போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்கின்றனர்.

அவ்வாறு அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள், அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இது போன்ற குறைகளைச் சரி செய்ய கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்டத் திட்டங்கள், கலாச்சாரம், மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக தமிழ்நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள், இது குறித்து போதிய முன் அனுபவமோ, போதிய தகவல்களோ இல்லாமல் செல்லும் நிலையே உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பெற தேவையான முன்பயண புத்தாக்க பயிற்சி பெற நீண்ட தூரம் பயணித்தும், கூடுதல் செலவு செய்தும் சென்னைக்கு வர வேண்டிய நிலையே உள்ளது.

இந்த நிலையில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' சென்னை மட்டுமின்றி, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அவ்வறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில், 54 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் அமைத்து, தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையத்தில் கீழ்க்கண்ட மூன்று பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி,

  1. வேலைத்தேடி வெளிநாட்டிற்குச் செல்லும் அனைவருக்குமான முன் பயண புத்தாக்கப் பயிற்சி
  2. கட்டிட தொழிலாளர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் வீட்டு வேலை போன்ற பணிகளுக்காக செல்பவர்களுக்கு இப்பணிகளுக்கான அடிப்படை தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தெளிவுகள் ஏற்படுத்துதல்.
  3. ஆங்கிலம் மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சி.

இந்த பயிற்சிகளுடன் தேவைக்கேற்ப வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்களை கையாளுதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் மூலம், வெளிநாட்டு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு விசா உடன் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

இப்பயிற்சிக்காக வழங்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தில் (nrtamils.tn.gov.in) முகவர்கள் மூலம் பயிற்சியில் கலந்து கொள்வோர் தங்களை பதிவு செய்யலாம். மேலும் புதியதாக வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்களும் நேரடியாக பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு முன் பயண புத்தாக்கப் பயிற்சி கையேடுகள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சி மையங்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு காணொளிகள் மூலமாகவும் மற்றும் கிராம சபைக் கூட்டங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், அயல் நாட்டு வேலை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, தமிழர்கள் பாதுகாப்பான புலம் பெயர்தலை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

ABOUT THE AUTHOR

...view details