சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சித்ரா (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமாக இருந்து வந்துள்ளார். கரையான்சாவடி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஹேமந்த்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் முன்பு பதிவு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஹூட்டிங் பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருவதால் கோட்டூர்புரத்திலிருந்து பூந்தமல்லியில் நடக்கக்கூடிய படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருந்ததால், சித்ரா கடந்த 4ஆம் தேதி முதல் நசரத்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த்நாத்துடன் தங்கி வந்தார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர்-9) அதிகாலை 2.30 மணிக்கு ஹூட்டிங் முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு வந்த சித்ரா குளிக்க செல்வதாக ஹேமந்த்நாத்திடம் கூறிவிட்டு தனது அறையை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். ஹேமநாத் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் நடிகை சித்ரா கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் செய்திருப்பதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினர். உயிரிழந்த சித்ராவின் முகத்தில் கீறல் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சித்ராவின் தாயார் ஹேமந்த்நாத் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.