சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, தன்னாட்சி அந்தஸ்துகோரி கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் விண்ணப்பித்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் ஆகியவை இல்லை என்பதால் விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிராகரித்தது.
இந்த நிராகரிப்பு முடிவு குறித்த தகவலை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் தெரியப்படுத்தியது. இந்நிலையில் தங்கள் விண்ணப்பத்தை நிராகரித்த அண்ணா பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான மனுவை பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க உத்தரவிடக்கோரி அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்னபூர்ணா கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தன் துரைசாமி, தேர்ச்சி விழுக்காடு மற்றும் மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என்றும், முழுமையான முடிவு எடுப்பதற்கு அதிகாரம் யூஜிசிக்கு மட்டுமே இருப்பதாக உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.