சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா இன்று (நவ.15) காலை 9.30 மணியளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் குரேம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
மேலும் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவரது சமூக வலைதளப்பக்கத்தில், "சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி சங்கரய்யாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை அவரது சமூக வலைத்தளப் பக்கததில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் தமிழர் தியாகி என்.சங்கரய்யா மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கரய்யா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் மக்கள் பணியை சிறப்பாக ஆற்றி உள்ளார்.
சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது, 'வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு!' என்று இவர் பேசியது அன்றைய தினம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான 'ஜனசக்தி' நாளிதழின் முதல் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் 'தீக்கதிர்' நாளிதழின் முதல் ஆசிரியராகவும் பணியாற்றிவர்.
இவர் ஆசிரியராக இருந்தபோது பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச் செய்தார். அன்னாரின் இழப்பு அவர் சார்ந்த கட்சிக்கும் மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சமூக வலைதளப் பக்கத்தில், "தான் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை போராடியவர், சுதந்திர போராட்ட தியாகி ஐயா சங்கரய்யா மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சமூக வலைதளப்பக்கத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர்.