சென்னை: அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் நேற்று (டிச.6) அனுசரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் காவி சட்டை அணிந்த அம்பேத்கரின் படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் காவிய தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
அதன் தொடர்ச்சியாக நேற்று அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அர்ஜூன் சம்பத் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டு அர்ஜூன் சம்பத் மீது செருப்பு, பாட்டில், கற்களை வீசினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்து பின்பு விடுவித்தனர்.