தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2023, 1:26 PM IST

ETV Bharat / state

ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை

சென்னை ஆதம்பாக்கத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். பழிக்கு பழியாக நடந்த இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

police investigating the revenge killing incident in chennai Adambakkam
police investigating the revenge killing incident in chennai Adambakkam

சென்னை: ஆதம்பாக்கத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்ற நபரை, மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42), இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர். மேலும் அந்தக் கொலை வழக்கில், சீனிவாசன் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு சீனிவாசன், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 11ஆவது தெருவில் நடைபெற்ற நடந்த அவரது உறவினர் ஒருவரின் காரிய நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் சீனிவாசன் அவரது மகனுடன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. துக்க நிகழ்வில் பங்கேற்ற சீனிவாசன் வெளியில் சேரில் அமர்ந்து இருந்துள்ளார்.

அப்போது கருப்பு நிற மாஸ்க் அணிந்து கொண்டு பட்டாக் கத்தியுடன் இருசக்கர வாகனம், ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சீனிவாசனை சரமாரியாக வெட்டியது. மேலும் அதனை தடுக்க முயன்ற குட்டிமா (34), பிரதீப் (15) ஆகியோர்களையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

தகவலறிந்து ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடம் வந்தனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆதம்பாக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சுவாச், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தனர். மடிப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடும் பணி நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் 2021இல் கொலை செய்யப்பட்ட நாகூர் மீரானின் கொலைக்கு பழி தீர்க்க, தற்போது சீனிவாசன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாகூர் மீரான் ஒரு சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். தென் சென்னை பகுதியின் முக்கிய ரவுடியான இவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் ஆதம்பாக்கத்தில் வைத்து 2021 ஆம் ஆண்டு நாகூர் மீரான் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தான் சீனிவாசன் சிறை வாசம் அனுபவித்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடப்பது தொடர் கதையாகி வருவது ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழி வாங்க கொலை செய்யும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து இந்த பழிவாங்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: 4 லாரிகளுடன் எஸ்கேப்... 150 டன் பொட்டாஷ் உரத்துக்காக நடந்த கடத்தல்... துணிவுடன் மடக்கிய தூத்துக்குடி போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details