சென்னை: கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகாரின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த ஐந்து டேங்கர் லாரிகள், மூன்று டாடா ஏசி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கலப்பட டீசல் பறிமுதல்
அதைத்தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 03 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓட்டுநர் மதியழகன் (47), கிளீனர் செல்வம் (26), உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல் கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் கடந்த 12ஆம் தேதி வாகனத் தணிக்கையில் நான்கு ஆயிரம் லிட்டர் ஏற்றி வந்த டாடா ஏசி வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி, செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.