எம்.பி.சி பிரிவினருக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.
வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உள்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும், பட்டியல் இனத்தவர் ஐந்து பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவரவர் சமூகப் பிரிவுகளில் வாரியம் சேர்த்திருந்தது. இது பெரும் அநீதியாகும்.
அதுமட்டுமின்றி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்துவிட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலும் அவர்களை சேர்த்தால் அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்ட முட்டாள்தனமான அச்சத்தை நிராகரித்த நீதிபதிகள், ‘‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவு இடத்தை பிடிக்கும்போது அதை மதிக்க வேண்டும். அவர்கள் பொதுப்பிரிவு இடத்தை பிடிக்கக்கூடாது என்று யாரும் கூற முடியாது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பொதுப்பிரிவில் நியமிக்கப்படுவது தான் முறை. இது யாருடைய உரிமையையும் பறிக்காது’’ என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக தெரிவித்திருக்கின்றனர்.