தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி.. திடீர் விசிட், காரணம் என்ன? - பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு
பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு

By

Published : May 29, 2022, 7:45 PM IST

சென்னை:பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி ராமதாஸ் நேற்று (மே 28) பொறுப்பேற்ற நிலையில் இன்று (மே 29) காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "பாமக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறேன். அதன் அடிப்படையில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அரசியல் ஏதும் பேசவில்லை. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றாகும்" என்றார்.

எதிர்க்கட்சி தலைவருடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு

நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை:தொடர்ந்து பேசிய அவர், "2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இப்போதிலிருந்தே பாடுபடுகிறோம். 2024 தேர்தலுக்கும் உடன் தயாராகிறோம். அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சினை மது மற்றும் போதை சார்ந்த பிரச்சினைகள். தமிழ்நாட்டில் பல கல்லூரிகளுக்கு வெளியில் போதை பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன். அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்றால் தீவிர மது ஒழிப்பு கொள்கையை கொண்டு வர வேண்டும்.

இயற்கை சீற்றங்கள் அதிக அளவில் நிகழ்கிறது. அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். விவசாய பிரச்சினை, நீர்நிலை பிரச்சினை உள்ளது. இவை எல்லாம் அடுத்த தலைமுறை பிரச்சினை. இவற்றை பின்தொடர்ந்து எங்கள் பயணம் இருக்கும்.

நீட் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத ஒன்று. தமிழ்நாட்டிற்கு நீட்டில் இருந்து விலக்கு வேண்டும். இரண்டு முறை சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக இந்தியாவில் தற்கொலை செய்யும் மாணவ மாணவிகளில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். எனவே இத்தேர்வுக்கு அரசு உடனடியாக விலக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வின் போது பாமக கௌரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே மணி மற்றும் ஏ.கே மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்

இதையும் படிங்க: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வுக்குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details