தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2019, 2:35 PM IST

ETV Bharat / state

பிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்வியைக் காக்க வேண்டும் - ராமதாஸ்

சென்னை: கட்டாயக் கன்னட கல்விக் கொள்கை குறித்த தவறான புரிதல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது வருத்தம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்

கன்னட கல்விக் கொள்கை குறித்த தவறான புரிதல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் மாநிலமாகவும் தமிழ்ப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலமாகவும் கர்நாடகம் திகழ்ந்துவந்தது.

இந்தியாவில் 1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் கர்நாடகத்தின் அங்கமாகவே நீடித்த அந்தப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டுவந்தன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகள் பயின்றுவந்தனர்.

ஆனால், கடந்தாண்டு அப்பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 122ஆக குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது.

கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியிலும் தமிழ் மொழியையும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு காரணம் கர்நாடகத்தில் கன்னடம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று தவறாக செய்யப்பட்ட பரப்புரைதான். இந்தப் பரப்புரையை நம்பி தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தமிழ் மொழியை படிப்பதை கைவிட்டு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளை படிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதே நிலை நீடித்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வாழும் அவலநிலை ஏற்பட்டுவிடும். இத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

கர்நாடகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பதற்கு வசதியாக கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் மற்றும் தமிழாசிரியர்களை அனுப்பி வைத்தல், கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் படித்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தில் தமிழர்கள் குடும்பத்து குழந்தைகள் தடையின்றி தமிழ் வழியிலும் தமிழ் மொழியையும் கற்க முடியும்.

உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி வழங்கியது. உலகம் முழுவதும் 30 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்க தமிழ்நாடு அரசு உதவியுள்ளது. லண்டன், யாழ்ப்பாணம், மலேஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐந்து பல்கலைக் கழகங்களில் நடப்பாண்டில் தமிழ் இருக்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக அளவில் தமிழ்க் கல்வி & ஆராய்ச்சிக்கு உதவுவதைப் போலவே உள்நாட்டில் பிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்விக்கு அரசு உதவ வேண்டும். அதன்படி கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரயில் பாதை திட்டம் நிறைவேற மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை - அன்புமணி ராமதாஸ் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details