இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றங்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார்கள். பல தருணங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பை அறிந்து, பயிர் செய்யாமல் தவிர்த்து விடுவார்கள். ஆனால், இம்முறை தான் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் அறுவடையை எதிர்நோக்கியிருந்த நிலையில், எதிர்பாராத தருணத்தில் பெய்த மழையால், முதலீடு செய்த மொத்தத்தையும் இழந்து கடனாளிகளாக மாறியிருக்கிறார்கள்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால், குறுவை நெல் சாகுபடி வெற்றிகரமாக அமைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் 15 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அவற்றில் பெருமளவிலான நெற்பயிர்கள் அண்மைக் காலங்களில் 4 கட்டங்களாக பெய்த மழை வெள்ளத்தால் சேதமடைந்து விட்டன.
நெற்பயிர்கள் மட்டுமின்றி கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நிலக்கடலை, சோளம், கரும்பு, உளுந்து, தோட்டக்கலைப் பயிர்கள் போன்றவையும் முழுமையாக அழிந்து விட்டன. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ளது. பிற பயிர்கள் பயிரிடப்பட்டு மழையைத் தாங்கும் பருவத்தை அடைவதற்கு முன்பாகவே அழுகிவிட்டன. அதாவது காவிரி பாசனப் பகுதிகள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்து விட்டனர்.
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் செய்வதற்குத் தேவையான இடுபொருட்களை அவர்கள் கடன் பெற்றே வாங்குகின்றனர். இப்போதும் அவர்கள் நம்பிக்கையுடன் கடன் வாங்கித் தான் சாகுபடி செய்திருக்கின்றனர். விவசாயிகளின் நம்பிக்கையை, ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை பெய்த மழை முற்றிலுமாக சிதைத்து விட்டது.