புதிய அரசாணையின்படி ஏற்கனவே இருந்த 6 பாடங்கள், 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 6 பாடங்கள் இடம் பெறுகின்றன. மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன.
அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன. இந்தப் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். தற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட இருக்கிறது. அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்தப் பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என ஐந்து படங்கள் மட்டும் இருக்கும். கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப் பதிவியல், தணிக்கையியல், கணினி தொழில்நுட்பம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன.
இதில், கணினி தொழில்நுட்பம் பாடம் நீக்கப்பட்டு 5 பாடங்கள் மட்டும் இடம்பெற உள்ளன. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, தலா 100 மதிப்பெண்கள் என, 500 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. மருத்துவம் படிக்க இருக்கும் மாணவர்களுக்கு கணிதம் பெரும் சுமையாக இருந்து வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மேல்நிலை வகுப்பு மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#Exclusive... தமிழ் வழிக் கல்வி கற்க உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள்