சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காவல்துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்த் தொற்று பரவல், தேர்தல் பணி, பந்தோபஸ்து, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் பல்வேறு இடங்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைகள் கூட ஏற்பட்டன.
அதன் தொடர்ச்சியாக காவல் துறையினரின் நலன் கருதி அவர்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அனைத்து காவல் துறையினருக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் காவல்துறை சார்பில் காவலர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் காவலர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த குறைதீர்ப்பு முகாம்களில் தீர்க்கப்படாத குறைகள் தொடர்பாக டி.ஜி.பி தலைமையில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களின்போது மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐ.ஜிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காவல் துறையினரிடம் மனுக்கள் பெறப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை இதுவரை இரண்டு கட்டங்களாக காவலர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (டிச.22)மூன்றாம் கட்டமாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல்துறை சார்பில் குறைதீர்ப்பு முகாம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முகாமில் தற்போது வரை கலந்துகொண்டுள்ள 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் இருந்து ஒருவர் பின் ஒருவராக, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று வருகிறார்.