சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தினசரி 400 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தனி வார்டு அமைக்க வேண்டும்- மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
சிறப்பு கவனத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வட்டார, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதற்கட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையின்போது 230 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு இருந்தது, ஆனால் தற்போது 2 ஆயிரத்து 67 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. 64 ஆயிரத்து 281 படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் 1 லட்சத்து 48 ஆயிரம் படுக்கைகள் 24 மணிநேரத்தில் ஏற்பாடு செய்ய முடியும், 3 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியும். உயிர் பறிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை, தொண்டை வலி, இருமல் போன்ற பதிப்புகளே இருக்கிறது. அதி தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அதிக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே 4வது அலையாக மாறும்.