தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2023, 6:26 PM IST

ETV Bharat / state

"நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிடுக"- சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!

தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதிய நிலுவையை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Doctors Union
டாக்டர்கள் சங்கம்

சமூக மருத்துவர் சங்கம்

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் ரவீந்தரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், ’’கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் நியமிக்கப்பட்ட 160 டயாலிசிஸ் டெக்னீசியன்களை, முதல்வர் மருத்துவக் காப்பீடு மூலம் அவுட்சோர்சிங் முறைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதை உடனடியாக கைவிடவேண்டும். அது மட்டுமின்றி, அவர்களின் ஊதியமும் ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக் குறைப்பு நியாயமற்றது. குறைந்த பட்ச ஊதியச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, உடனடியாக ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

சிறுநீரக மருத்துவப் பிரிவு துறைத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும். தற்போது பணியாற்றி வரும் அனைத்து டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் 4 பேர் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 3,85,878 ஹீமோ டயாலிஸிஸ் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மூன்று டயாலிசிஸ் படுக்கைகளுக்கு ஒரு டயாலிசிஸ் டெக்னீசியன் இருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கான, புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம் ஏப்ரல் 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும்.

ராஜஸ்தான் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள நல உரிமை மசோதா வரவேற்புக்குரியது. இந்த நல உரிமை மசோதாவை, திரும்பப் பெறக்கோரி மருத்துவர்கள் பலர் போராடுவது வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது எதிர்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திமுக ஆட்சி அமைந்த உடன் ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். ஆனால், ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடியும் நிலையிலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

அரசுப்பணியில் சேரும் மருத்துவர்களுக்கு அரசாணை 354இன் படி 13ஆம் ஆண்டில் ஊதியப்பட்டை 4 வழங்க வேண்டும். இது மருத்துவர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில், மாதந்தோறும் 1,500 ரூபாய் தொகுப்பூதியத்தைப் பெற்றுக் கொண்டு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் வழங்க வேண்டும் என அரசாணைப் போடப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. அதன்படி ஊதியம் வழங்கினாலும் அவர்களுக்கு அரசு தலா ரூ.6 லட்சம் வரையில் நிலுவைத் தொகை வழங்க வேண்டி இருக்கும்.

ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஊதிய நிலுவை வைக்காமல் அரசு வழங்குகிறது. எனவே மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்லை பிடுங்கினாரா? இல்லையா? - நெல்லை விவகாரத்தில் நீடிக்கும் குழப்பம் - முழுவிவரம்!

ABOUT THE AUTHOR

...view details