இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,, "தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை. தொழில்நுட்பக் கல்வியில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை இன்னொரு பிரிவினருக்கு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
ஒரு காலத்தில் இந்தப் படிப்புகளைப் படிக்க கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி விட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்பாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக இருந்தது. ஆனால், இப்போது இது 50 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது தான்.
தொழில்நுட்பப் பட்டப்படிப்பு வழங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரமும், ஐ.டி.ஐ. பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும், ஐ.டி.ஐ.களிலும் சேர்ந்து விடுகின்றனர்.