சென்னை: இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்பில் நேற்று(மார்ச். 4) நடந்த கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஐநாவின் மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ் என்கிற குறிக்கோளின்படி தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரத்தை எட்டுவது எனும் பொளுளாதார குறிக்கோளை வென்றெடுக்கும். அதே நேரத்தில் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களையும் சேர்ந்தே அடையும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. வளமான சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு மாநிலத்தின் சிறப்பான வளர்ச்சி குறிக்கோளுக்கு காரணமாக உள்ளது.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. இந்தநேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வையில், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் குறிக்கோளில் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் பங்கெடுக்கின்றது. மருத்துவத்துறை முக்கிய முன்னெடுப்பான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம், கடந்த சில மாதங்களின் நமது அரசு பொதுமக்களின் இல்லம் தேடி மருத்துவசேவைகளை வழங்கும் திட்டம் உலகிலேயே முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.