தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னையில் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து முறை ' - முதலமைச்சர் - stalin news

உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து முறையினை நமது மாநிலத் தலைநகரில் அமைக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

நமது தலைநகரில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து
நமது தலைநகரில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து

By

Published : Nov 17, 2022, 6:17 PM IST

சென்னை: நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் குழுமக்கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல், அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக புதிய தொழில் நுட்பங்களை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவது ஆகியவை அதே அளவுக்குக் குறையும்.

எனவே, பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். இதில் நான் குறிப்பாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலையில் தொடங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:வன உயிரினம், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details