சென்னை வானகரத்தில்கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நேற்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 11ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 15) இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி மற்றும் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் அறிக்கைகளையும், வீடியோ, சிசிடிவி மற்றும் போட்டோ ஆதாரங்களையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ் திலக் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து வாதிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது எனவும்; பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் விளக்கமளித்தார்.
மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும் மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.
சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அலுவலரையோ, சிவில் நீதிமன்றத்தையோ மட்டுமே அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வன்முறையில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய காவல் துறை வழக்கறிஞர், பொது சொத்துகள் சேத தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.