சென்னை:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று(பிப்.23) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருமான புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "நேற்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிமுகவே எடப்பாடி பழனிசாமி கைக்கு போனது போல் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தீர்ப்பின் முழுமையான நகலில் 38ஆவது பகுதியில் சில அம்சங்கள் பேசப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு குறித்து சிவில் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார் எனக் கூறுவது சுத்தமான பொய். நேற்று வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு நடந்ததா? இல்லையா? என்பது மட்டும்தான், மற்றபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்காக ஒதுக்கப்பட்டது. அதை மற்ற யாரும் ஏற்க முடியாது. அவ்வாறு யாரேனும் அந்த பதவியை ஏற்றால், அதிமுகவின் அடிப்படைத் தொண்டன் கூட வழக்குத் தொடரலாம். நானும் இதற்காக வழக்கு தொடரப்போகிறேன். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார், ஓபிஎஸ் தனிமையாக்கப்பட்டார். ஓபிஎஸ் தோற்றுவிட்டார் என கூறுவது அனைத்தும் தவறு. எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் பண மழை பொழிகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் மீசை வச்ச ஆம்பளையாக இருந்தால் வா மோதிப் பார்க்கலாம் எனப் பேசுகிறார். ஆனால், திமுகவினர் சீமானுடன் மட்டும் பிரச்னை செய்கின்றனர், எடப்பாடி பழனிசாமி உடன் எந்த ஒரு பிரச்னையிலும் ஈடுபடவில்லை.