சென்னை:ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் இன்று (பிப்.09) புகார்மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு மிரட்டல் கால் அதிகமாக வருகிறது. இறுதியில் புகழேந்தி இறந்துவிட்டார் என செய்தியை பரப்பத் தொடங்கியுள்ளனர். இது குறித்த தகுந்த ஆதாரங்களை டிஜிபி அலுவலகத்தில் வழங்கியுள்ளேன்.
ஆதாரத்துடன் கொடுத்திருப்பதால் 24 மணி நேரத்தில் அவர்கள் கைதாவார்கள் என நம்புகிறேன். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸை கண்டவாறு திட்டி பதிவு போடுகின்றனர்.
தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம். தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அதனால் வேட்பாளரை திரும்பப்பெற்றோம். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னைப் பற்றியும், ஓபிஎஸ் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டு தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள்.