நெருங்கும் மாநாடும்: ஓபிஎஸ்-யின் மாநாடும்:ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருச்சி மாநாடு போன்று கொங்கு மண்டலத்திலும் மாநாடு நடத்த வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் விதமாக கொங்கு மண்டத்தில் விரைவில் மாநாடு நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதனால், அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
எடப்பாடியின் கோட்டையை அசைத்து பார்க்கும் ஓபிஎஸ்:இதன் ஒரு பங்காக, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பாக மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு மிகுந்த பகுதியாக கூறப்படும், கொங்கு பகுதியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் இறங்கியுள்ளனர். மேலும், அதிமுக 2017ஆம் ஆண்டு பிரிந்த போது நமது எம்ஜிஆர் நாளிதழும், ஜெயா டிவியும் சசிகலா மற்றும் டிடிவி தரப்பினரிடையே சென்றது. அதற்கு பின்னர் 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக பிரிந்தபோது நமது அம்மா நாளிதழும், நியூஸ் ஜெ டிவியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே சென்றது.
இதனால், நமது அறிவிப்புகள் மற்றும் நமக்கான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க நாளிதழும், செய்தி நிறுவனமும் ஆரம்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு, விரைவில் ‘நமது புரட்சி தொண்டன்’ என்ற நாளிதழை தொடங்க உள்ளதாகவும் அதற்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
பாஜகவின் செல்வாக்கு பெற்றாரா ஓபிஎஸ்?: ஓபிஎஸ்-ன் திடீர் உற்சாகத்திற்கு என்ன காரணம் என அவருடைய தரப்பின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் விசாரித்த போது, “டெல்லி பாஜக தலைவர்கள் எங்கள் அணிக்கு கிரீன் சிகினல் காட்டியுள்ளனர். அடுத்தடுத்த மாநாடு நடத்தவும் தென் மாவட்டங்களில் தேர்தலுக்கான பணிகளை தொடங்கவும் கூறியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவின் டெல்லி முகமாக கருதப்பட்டவர் மைத்ரேயன். அதிமுக எங்கள்(ஓபிஎஸ்) - ஈபிஎஸ் அணிகள் பிரிந்த போது மாறி மாறி தாவிய மைத்ரேயன், தற்போது இறுதியாக பாஜகவில் இணைந்துள்ளார்.
தற்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனை மையமாக வைத்து டெல்லி பாஜக தலைவர்களிடம் ஓபிஎஸ் பல செயல்பாடுகளை செய்து வருகிறார். மேலும், ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் எம்.பியும், டெல்லி பாஜக தலைவர்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து விடலாம் என நாங்கள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதனால், பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி இணைவாரா? என்ற குழப்பம் ஏற்படும். அந்த குழப்பத்தால் மீண்டும் அதிமுகவில் இணையும் சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என கூறினார்.