சென்னை:முதியோர் ஓய்வூதியத் திட்டப்பயனாளிகளின் எண்ணிக்கையைக்குறைக்கும் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். “திராவிட மாடல்” என்று சொல்லிக்கொண்டு முதியோர் ஓய்வூதியத் திட்டப்பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது.
இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்ற பழமொழி தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையிலேயே முதியோர் ஓய்வூதியத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று பயனாளிகள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் தான் மிச்சம். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழையெளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
விடுதலின்றி பயன் பெறுவது என்பதற்குப்பதிலாக இருப்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற பரிதாபகரமான நிலைதான் தற்போது நிலவுகிறது. இதுகுறித்து, அரசு அலுவலர்கள் கூறுகையில், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் ஆதார் எண் அடிப்படையில் எரிவாயு உருளை, நகைக் கடன் போன்ற விவரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.