சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாடு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தவறான செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற்ற உம்ராவ், திருப்பூரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.