சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், குமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருந்தன. இதனால் காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அப்போது செல்போன் பறிப்பு நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அனைத்து செல்போன் பறிப்பிலும் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்தபடி உள்ளது தெரியவந்தது..
இதனை வைத்து விசாரணை செய்தபோது அனைத்து சம்பவமும் ஒரே நபர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால், அனைத்து காவல் நிலையத்திலும் இவரது புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். மேலும் இதேபோன்று கோட்டூர்புரம், எழும்பூர் பகுதிகளில் உள்ள வாட்ச் மேன் மற்றும் கடை வியாபாரிகளிடமும் கொள்ளையரின் புகைப்படத்தை காண்பித்து இவரை கண்டால் தகவல் கொடுக்கும் படி தனிப்படை காவல்துறையினர் செல்போன் எண்ணையும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் செல்போன் கொள்ளையர் உலாவி கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்தத் தெரு முழுவதும் சுற்றியுள்ளனர். அப்போது அந்த கொள்ளையர் மரத்துக்கு அடியில் நின்று செல்போனை பறிக்க தயார் நிலையில் இருந்தார். இதனைக் கண்ட தனிப்படை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து அவர் மீது மோதி கொள்ளையரை தப்பிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அவர் நடைபயிற்சியில் மேற்கொண்டிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிக்க முயன்றபோது பிடிப்பட்டுள்ளார்.
மேலும், இவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மொபைல் பறிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் எழும்பூர் காவல்துறையிடம் கைதியை ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சென்னை தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த வினோத் அலெக்சாண்டர் என்கிற குதிரை சிவா. இவர் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததால் வீட்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விரட்டியடித்துள்ளனர்.