தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அரசு தகவல்

By

Published : May 20, 2020, 9:26 PM IST

சென்னை: அரசு செலவில் ஒரு லட்சத்து 799 வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

court
court

சென்னை கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் முன்பு அவர்கள் தங்குவதற்கு சமூக நல கூட விவரங்கள் அறிவிக்க வேண்டும், வெளியூர் செல்வதற்கான ரயில் விவரங்களை இணையதளத்தில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாரயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, மற்ற மாநில அதிகாரிகளுடன் பேசி வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பவது தொடர்பாக ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதுவரை பதிவு செய்துள்ள சுமார் இரண்டு லட்சத்து 43 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களில் ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் தமிழக அரசின் செலவில் அனுபப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசின் சார்பில் இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், சில மாநிலங்கள் அனுமதிக்க மறுப்பதால் அந்த மாநில அரசுகள் தயாராக இருந்தால், சிறப்பு ரயில்களை இயக்க தயார் என்றும் குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்ப தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு மத்திய - மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விரிவான அறிக்கையை வரும் 26ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details