தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பழைய வினாக்கள்? - விசாரணைக்கு கோரிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான இரண்டு பாடங்களுக்கான வினாத்தாளின் பொது அறிவுப் பிரிவில், பழைய வினாக்கள் எந்தவித மாற்றமுமின்றி அப்படியே இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

By

Published : Jan 19, 2022, 2:26 PM IST

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பழைய வினாக்கள்?; விசாரணைக்கு கோரிக்கை!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பழைய வினாக்கள்?; விசாரணைக்கு கோரிக்கை!

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான இரண்டு பாடங்களுக்கான வினாத்தாளின் பொது அறிவுப் பிரிவில், முந்தைய தேர்வின் 10 வினாக்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான (Polytechnic) விரிவுரையாளர் தேர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்டது.

விவாதத்துக்குள்ளான கேள்விகள்

190 மதிப்பெண்களுக்கு கணினி வழியாக நடைபெற்ற இத்தேர்வில், 180 மதிப்பெண்களுக்கு அந்தத் துறை சார்ந்த வினாக்களும், 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவு சம்பந்தமாக 10 வினாக்களும் கேட்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பங்குபெற்று எழுதிய இத்தேர்வில் ஒரு மதிப்பெண்கூட தேர்வு முடிவுகளை மாற்றும் வகையில் அமையும்.

இந்நிலையில் வேதியியல் துறைக்காக முன்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் இடம்பெற்றிருந்த 10 பொது அறிவுப் பிரிவு வினாக்கள், அப்படியே இசிஇ (ECE) துறைக்கு மீண்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் கேட்கப்பட்டுள்ளது. இது தற்போது டிஆர்பி (TRB) வெளியிட்டுள்ள விடைத் தொகுப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டிஆர்பி வாரியத்தின் இந்தச் செயலானது தேர்வு நடப்பதற்கு முன்பே வினாக்களுக்குச் சரியான பதிலை வெளியிடுவதற்குச் சமமாகும். பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், இந்தப் பொது அறிவு கேள்விகளைத் தேர்வர்களுடன் விவாதித்துள்ளன. இதனால் ஏதோ குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சுலபமாகத் தேர்வில் வெற்றிபெறும் நிலை உருவாகிவிட்டது.

சந்தேகத்தை ஏற்படுத்திய வினாத்தாள்

வினாக்களை முறையின்றி வெளியிட்டதாகவே அநேக தேர்வர்கள் இச்சம்பவத்தைப் பார்க்கிறோம். மேலும் இசிஇ (ECE) தேர்வில் சில கேள்விகளுக்கு, கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடை தனியாகத் தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கேள்விகளுக்குள் சரியான விடை தனித்துத் தெரியுமாறு கொடுத்தது நேர்மையான தேர்வர்களாகிய எங்களை வேதனையடையச் செய்துள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு உரிய விசாரணை செய்து தேர்வர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

ABOUT THE AUTHOR

...view details