தமிழ்நாடு

tamil nadu

'காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு... தடை கோரும் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை தேவை'

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல்செய்துள்ள வழக்குகளைத் தள்ளுபடிசெய்ய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

By

Published : Jul 21, 2021, 6:44 PM IST

Published : Jul 21, 2021, 6:44 PM IST

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் வீணாகக் கடலில் கலக்கக்கூடிய உபரிநீரைக் கொண்டு மக்களின் குடிநீர், வேளாண் பாசனங்களுக்காகத் தீட்டப்பட்ட திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்க கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

தற்போது இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரான வகையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழ்நாட்டின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் அடிக்கல்

இந்நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடைவிதிக்க கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.வெள்ளப் பெருக்கின்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் உபரிநீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டது.

14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டத்துக்குத் தமிழ்நாடு ஒப்புதல் தரவில்லை.

மாகாண ஒப்பந்த சாராம்சத்தை மீறும் கர்நாடக அரசு

இதற்காக, வேண்டுமென்றே தங்களுக்குத் தொடர்பில்லாத, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடை கேட்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்.

சென்னை, மைசூரு மாகாணங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் சாராம்சமே, சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி, மைசூரு மாகாண அரசு காவிரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளைக் கட்டக்கூடாது என்பதுதான்.

இதற்குக் காரணம் காவிரி ஆற்றின் மேல்படுகையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் அணைகளைக் கட்டினால், காவிரி ஆற்றின் கீழ்ப் படுகையில் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு வரும் நீர் தடைபடும் என்பதால்தான்.

வெளிச்சத்துக்கு வந்த கெடுமதி எண்ணம்

தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் அணைகளைக் கட்டக்கூடாது என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும்போது, அதனைத் தமிழ்நாடு எதிர்க்கிறது.

இதற்குக் காரணம், புதிய அணைகளைக் கட்டும்போது, தமிழ்நாட்டுக்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாகக் குறையும். அதே சமயத்தில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர்-சரபங்கா நீரேற்றுத் திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக, தமிழ்நாட்டில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படுமே தவிர, கர்நாடகாவுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது.

தமிழ்நாட்டுக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது பொறாமையின் வெளிப்பாடு. இதன்மூலம், உபரிநீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழ்நாடு மக்களுக்குப் பயன்படக் கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை

சென்னை-மைசூரு மாகாணங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறி, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்குத் திருப்பி எடுத்துச் செல்லும் திட்டம் உள்பட, தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.

இந்த மனு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே, இதில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர்-சரபங்கா நீரேற்றுத் திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்குத் தடை கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாகத் தள்ளுபடி செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'

ABOUT THE AUTHOR

...view details