தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2022, 7:11 PM IST

ETV Bharat / state

வாடகைத் தாய் விவகாரம்; தனியார் கருத்தரித்தல் மருத்துவமனைக்கு நோட்டிஸ்...!

சென்னையில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மையம் வாடகைத் தாய்க்கான விதிமுறைகளை மீறியதாக விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வாடகை தாய் விவகாரம்
வாடகை தாய் விவகாரம்

சென்னை: அமைந்தகரையில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகள் பதிவு செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை அமைந்தகரையில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மையத்தில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாடகைத்தாய் சிகிச்சை முறை வழங்குவதாகப் புகார் வரப்பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இக்குழுவானது 16ஆம் தேதி அன்று குற்றம்சாட்டப்பட்ட புகாரில் குறிப்பிட்ட முகவரியில் நேரடி விசாரணை மேற்கொண்டது. இந்த முகவரியில் கர்ப்பிணிப் பெண்கள், வாடகைத்தாயாகச் செயல்பட்ட பெண்கள் குழந்தை பிறப்பிற்கு பிந்தைய பராமரிப்பில் இருந்ததும் தெரியவருகிறது. இவர்கள் சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவருகிறது.

சமீப காலம் வரை இந்திய அரசின் ICMR வழிகாட்டு நெறிமுறைகளின்படி இச்செயல்முறைகள் முறைப்படுத்தப்பட்டு வந்தன. தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் 2021 மற்றும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் 2021 ஆகிய புதிய சட்டங்கள் இந்திய அரசிதழில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கான விதிகள், இந்த ஆண்டு வெளியிடப்பட்டு அவ்விதிமுறை மீறல்களுக்கு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், வாடகைத் தாயாகச் செயல்பட்ட அனைத்து தாய்மார்களின் வயது 25 வயதுக்கு மேல் உள்ளது மற்றும் அனைத்து தாய்மார்களும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது மேலும், அனைத்து வாடகை தாய்மார்களும் முதல் முறையாக வாடகைத் தாயாகச் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, இவ்வாடகைத் தாய்கள் தம்பதியருக்கு உறவினராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்களுடன், முந்தைய ICMR விதிமுறைகளின்படி இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ICMR விசாரணையில் வாடகைத்தாயாகச் செயல்பட்டு வரும் தாய்மார்களுக்கு அவசிய செலவினத்திற்குப் பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தியது தெரியவந்துள்ளது. (ICMR விதிமுறைகள் பிரிவு 3.10.3 மற்றும் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 38(1)-ன்படி மருத்துவமனை நிர்வாகம் நேரடியாகப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது)

வாடகைத் தாயாகச் செயல்பட்டுவரும் தாய்மார்களிடம் ஒப்புதல் படிவம் அவரவர் தாய்மொழியில் பெறப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. (செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 6(1) (2)-ன்படி வாடகைத் தாய்மார்களிடம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்)

வாடகைத்தாயாகச் செயல்பட்டு வரும் தாய்மார்களுக்குக் காப்பீடு திட்டம் ஏதும் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவில்லை என விசாரணையின் முடிவில் தெரிய வருகிறது. (கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 4(3)(ஐஐஐ)-ன்படி)

இந்த இனங்களில் வாடகைத்தாயாக ஒப்பந்தம் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் போடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ICMR வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையிலிருந்துள்ளது. அவ்வழிமுறைகளின்படி அவசிய செலவினங்களுக்கு மட்டும் பணம் வாடகைத்தாய்களுக்குத் தரும் நடைமுறைக்கு வழிவகை இருந்தது.

எனினும் புதிய வாடகைத்தாய் சட்டம் 2021 பிரிவு 53-ன்படி ஏற்கனவே வாடகைத்தாயாக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் தங்களது 10 மாத கர்ப்ப காலத்தினை தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, பல ICMR வழிமுறைகளைத் தவிர்த்து விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது குறித்து அம்மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரியக் காப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப மையங்கள் மற்றும் வாடகைத்தாய் முறை சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிறுவனங்களுக்கும் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் முறையான பதிவினை பெறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 25.11.2022 தேதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் வாடகைத்தாய் நடைமுறைகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் 2021 மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டம் 2021 மற்றும் உரிய விதிகள் முற்றிலும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு; உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை

ABOUT THE AUTHOR

...view details