சென்னையை அடுத்த செம்மஞ்சேரி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான முதலைப் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. முதலைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு இடமாக இது திகழும் நிலையில், இங்கு நூற்றுக்கணக்கான அரிய வகை வெளிநாட்டு முதலை வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பண்ணையில் வளர்ந்துவந்த கியூபா நாட்டைச் சேர்ந்த அரியவகை முதலை ஒன்று அண்மையில் திடீரென இறந்து போனது.
இதுகுறித்து, அந்தப் பண்ணையின் நிறுவனர்களின் ஒருவரும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான ரோம் விட்டேக்கர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“கடந்த மார்ச் 30ஆம் தேதி இரவு, எங்களது பண்ணைக்கு அருகில் உள்ள ஷெரட்டான் கிராண்ட் சென்னை ரிசார்ட் அண்ட் ஸ்பா (Sheraton Grand Chennai Research & Spa) என்ற தனியார் விடுதியில் சவுண்ட் ஸ்பீக்கர்களை அதிக அளவில் வைத்திருந்தனர். இதனால், இரைச்சல் அதிகம் ஏற்பட்டதால் சத்தத்தைக் குறைவாக வைக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இறந்துபோன முதலை அந்த விடுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில்தான் இருந்தது. இரைச்சல் அதிகளவிலிருந்ததன் காரணத்தினால் முதலைக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இறந்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இறந்துபோன முதலை நன்றாக உணவை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் இருந்தது. அதன் உடம்பில் காயங்களோ, நோய்வாய்ப்பட்டதற்கான எந்த அறிகுறியோ எதுவுமே இல்லை.
இந்த முதலை இனம் உலகிலேயே மிக அரிய வகை உயிரினம் ஆகும். ஒரு ஆண் முதலைக்கு மூன்று பெண் முதலைகள் என்ற விகிதத்தில் உள்ளன. நல்ல வேலை இது ஆண் முதலை இல்லை. அந்த பகுதியிலிருந்து முதலைகளை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முதலைப் பண்ணையின் நிறுவனர்களுள் ஒருவரான எனக்கு இது ஒரு பேரிழப்பு” என தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
ரோம் விட்டேக்கர் முகநூல் பதிவு