திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் பவர் கிரிட் நிறுவனத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த 1000 நபர்கள் தங்கி, கான்ட்ராக்ட் முறையில் பல்வேறு பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கினால், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்களது சொந்த ஊர்களுக்கு, ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்து தரக்கோரி,நொச்சிபாளையம் பிரிவில் இருந்து 4 கிலோமீட்டர் நடந்து வந்து, ஊதியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து காங்கேயம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா, ரவிக்குமார், வட்டாட்சியர் சிவசுப்பிரமணி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஊருக்குச் செல்வதற்கு ரயில் சேவை ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.