தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2022, 10:58 PM IST

ETV Bharat / state

தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டண உயர்வு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தப்படாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜன.24) மாலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை பெறப்பட்டது. இதில் மாணவர்களிடம் இருந்து 25 ஆயிரத்து 593 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 24,949 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டம்

இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களின் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 16,029 மாணவர்கள் பயின்று விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 8,451 மாணவர்களும், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 299 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்படும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

27 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு 76 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 360 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 10 பேருக்கும் பல் மருத்துவ படிப்பில் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 156 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 7 பேருக்கும் வீடியோஸ் படிப்பில் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்படும்.

கட்டணம் உயர்வு கிடையாது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 534 மாணவர்கள் இடம் பெறுவார்கள். இவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 437 மாணவர்களும் பிடிஎஸ் படிப்பில் 97 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்பில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 இடங்களும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்களும் உள்ளன. அவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் மாநில ஒதுக்கீட்டில் 4,319 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 170 இடங்களும் நிரப்பப்படும்.

அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,650 இடங்களில், 18 பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி கலந்தாய்விற்கு பின்னர் தொடங்கப்படும். மீண்டும் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்க உள்ளதால் நீட் தேர்வு தேவையில்லை என கருதுகிறோம். எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

இந்தாண்டு சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. மேலும் கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தொடர்ச்சியாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகும் கரோனா எண்ணிக்கை

ABOUT THE AUTHOR

...view details