சென்னை:ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 9 பேரையும் கைது செய்தனர்.
அதோடு மீனவர்களின் படகு, அவர்கள் மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை அனைத்தையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்று, கைது செய்த மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அவசர கடிதங்கள் எழுதினார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினர். அதன் பின்பு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. பின் மீனவர்கள் 9 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்களையும், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகளை எடுத்தனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாததால், 9 பேருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் அவசரக்கால சான்றிதழ்கள் வழங்கினர்.