தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2021, 10:57 PM IST

ETV Bharat / state

அறநிலையத்துறையில் ஸ்டாலினின் ஆஹா திட்டம்

கோயில்கள் குறித்தான மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்ய, அறநிலையத்துறை இணையதளத்தில், 'கோரிக்கைகளைப் பதிவிடுக' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்

CM Stalin, முக ஸ்டாலின், பிகே சேகர்பாபு, ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின், stalin in srirangam
CM Stalin, Minister of Hindu Religious Affairs, PK Sekharbabu

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் செயல்பாட்டில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவிற்கு ஏற்ப இத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்கள் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் ஒன்றானது கீழ்காணும் அறிவிப்பு:

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை, குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்துசமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுகின்றன. மேலும் திருக்கோயில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள், இதர வைபவங்கள் குறித்தும் பக்தர்களும், பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

கோரிக்கையை எப்படி பதிவிடுவது?

திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள், பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்தவற்கு ஏதுவாக, 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் புதிய திட்டம் அறநிலையத் துறையின் இணையதளமான hrce.tn.gov.in-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், பக்தர்கள் "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் திட்டத்தினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது அலைபேசி எண் (கட்டாயம்), மின்னஞ்சல் முகவரி (கட்டாயம் அல்ல) குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ஸ்கேன் (SCAN) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றலாம். அதன்பின் தங்களது அலைபேசி எண், மின்னஞ்சலுக்கு ஒப்புகை அட்டை அனுப்பப்படும்.

அறுபது நாட்களில் நடவடிக்கை

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலை துறை ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமின்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் (அமைச்சர்) விரிவாக ஆய்வு செய்யப்படும். சமர்பிக்கப்படும் கோரிக்கைகளின் மீது 60 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், பக்தர்களும் ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள், பக்தர்கள் இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி கோயில்களின் செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: 'ரஜினியை விட ரூ.1 லட்சம் அதிகம் கொடுத்த ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி'

ABOUT THE AUTHOR

...view details