தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் 3 புதிய சட்டக் கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு - மூன்று சட்டக்கல்லூரிகள்

சென்னை: தமிழ்நாட்டில் மூன்று புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

assembly

By

Published : Jul 10, 2019, 3:32 PM IST

Updated : Jul 10, 2019, 3:56 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக 202.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், வாகனம் நிறுத்தம், உணவகக் கட்டடம் மற்றும் பொது கழிப்பிடம் போன்ற கூடுதல் வசதிகளுடன் 5.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆண்டுதோறும் சட்டக் கல்வி பயில்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வியினை வழங்கிட புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக தலா 3 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் வீதம், மொத்தம் 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் செலவில், 2019-2020 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக, ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்.

பேரவையில் முதலமைச்சர் உரை

கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை பதிவுத் துறை அலுவலகம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

மேலும், நடப்பாண்டில் திருச்சிராப்பள்ளியில் வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிகவரித் துறை அலுவலக வளாகம் 23.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இணையத்தின் மூலமாக பதிவுத் துறை ஆவணங்களை பதிவு செய்ய ஸ்டார் 2.0 மென்பொருள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் விரைவான மற்றும் வெளிப்படையான சேவை வழங்கப்படுவதால், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதன் சேவைகளை மேலும் செம்மைப்படுத்த பழைய கணினிகளை மாற்றி புதிய கணினி மற்றும் உபகரணங்கள் 21.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும்’ என அறிவித்தார்.

Last Updated : Jul 10, 2019, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details